Share via:
சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்குள் இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த வாரத்தில் டி.பி.ஐ. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று பல திருமண மண்டபங்களில் கொண்டு சேர்த்தனர்.
அதைத்தொடர்ந்து தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதற்கிடையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டு தற்போது பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை டி.பி.ஐ. வளாகத்தில் இனி எந்த போராட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்றும், ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.