Share via:
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான அழைப்பை கனிமொழி எம்.பி. தனித்தனியாக மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மாநாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தேசியத் தலைவர்கள் வருகை புரிவதால் இம்மாநாட்டில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதிலும், அவர்கள் சிறந்த முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்பதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக உள்ளார்.
மைதானத்தில் இருக்கைகள், மழை பெய்தாலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் முதலமைச்சர் விழா ஏற்பாட்டாளர்களிடம் தெளிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.