Share via:
கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போன் ஆதாரங்களை திரட்ட காலஅவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சயான், வளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.
இவ்வழக்கை கோவை மாவட்ட டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 8ம் தேதியன்று வழக்கு விசாரணையின் போது இடைக்கால அறிக்கைத க்கல் செய்த நிலையில் இன்று வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
அப்போது அவர்கள் கூறும்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் தொலைபேசி, செல்போன் டவர் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அப்துல்காதர் இவ்வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதி ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.