Share via:
ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் சின்னத்துரை. இவர் நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் நேற்று (அக்.12) நெல்லை அருகே உள்ள இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் சின்னத்துரை தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீச்சல் குளத்திற்கு அருகே சின்னதுரை திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சின்னத்துரையை மீட்டு நெல்லையில் உள்ள ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் சின்னத்துரை வழியில் வரும்போதே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சின்னத்துரையின் திடீர் மறைவை முன்னிட்டு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சின்னத்துரையின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இன்று (அக்.13) சின்னத்துரையின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.