Share via:
லாட்டரி மார்ட்டின் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வருமானவரித்துறையினர் ரூ.173 கோடி சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி ரூ.910 கோடி வருவாய் ஈடுடியதாகவும், சட்ட விரோதமாகவும் பணப்பரிமாற்றம் செய்ததாக கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் தொடர்ச்சியாக காந்திபுரத்தில் உள்ள மார்ட்டின் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய 4 இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று (அக்.13) இரண்டாவது நாளாக சோதனை நடந்து வருகிறது.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.07 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை இதுவரை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளது. கடந்த ஜூலை 2019ல், மார்ட்டினும் அவருக்கு தொடர்புடையவர்களும் லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம் 1998ன் விதிகளை மீறுவதற்கும், சிக்கம் அரசை ஏமாற்றி தவறான ஆதாயத்தை பெறுவதற்கும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
அதன் தொடர்ச்சியாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் லாட்டரி மார்ட்டின் வீட்டில் 2வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ரூ.173 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்ட்டினுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இந்த சோதனை தொடரும் என்ற தகல்களும் கிடைத்துள்ளன.
அந்தவகையில் சென்னையில் மார்ட்டினுக்கு தொடர்புடைய விளம்பர ஏஜென்சிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. பன்பலை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரங்களை கொடுத்து வரும் இந்த ஏஜென்சிகளில், லாட்டரி மார்ட்டின் பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக பெறப்பட்ட தகவலின்படி இந்த சோதனையை அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.