Share via:
பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 1.5 லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அடுத்தடுத்த நகர்வுகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்தியபிரதேசம் மண்ட்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் பேசும்போது, ‘‘வைரலாகி வரும் வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டும். மத்திய பிரதேசத்தில்தான் அதிகளவில் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மாயமாகியுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். மேலும் பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை 1.5 லட்சம் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மாயமாகியுள்ளதாக தெரிவித்த அவர், தினமும் 17 பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடைபெறுகிறது என்று பதிவிட்டார்.
உஜ்ஜைன் சம்பத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்ட அவர், பழங்குடியினர் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக உரையாற்றினார்.