Share via:
தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் 10 நாட்களில் தலா 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் மாளிகையிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற அக்டோபர் 15ம் தேதி நவராத்தி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 24ம் தேதி வரையிலான 10 நாட்களும் மாலை 4 மணி முதல் 6 மணிவரையிலான கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாலை 5 மணி முதல் 6 மணிவரை கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலுவை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களின் பெயர், தங்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் வெளிநாட்டினரும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆளுநர் மாளிகைக்கு வருகைபுரிபவர்கள் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்படக் கருவிகளை கொண்டு வரக்கூடாது. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை ஆளுநர் மாளிகைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.