Share via:
புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்த சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல்வேறு பகீர் காரணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்ற பெண் அமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதில், ‘‘என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள நிலையில் நான் இந்த கடிதத்தினை எழுதுகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக பலரும் கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தலித் பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுவே மற்றவர்களுக்கு உறுத்தலாக இருந்துள்ளது என்றும், தொடர்ந்து தான் ஜாதிய ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் பதிவிட்டுள்ளார்.
கண்மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் சீர்பாடுகள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், சட்டமன்ற உறுப்பினராக என் பணியினை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.
இப்பதவியினை தனக்கு அளித்த முதலமைச்சருக்கு சந்திர பிரியங்கா நன்றி தெரிவித்துக் கொண்டார். எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை, அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். நன்றி” என்று அந்த ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பெண் அமைச்சர் பாலின ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தாக்கப்பட்டேன் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

