Share via:
தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜயவாடாவில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு சார்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவர்ம, இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகளும் சந்திரபாபு நாயுடு மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளிலும் சந்திரபாபு நாயுடு ஜாமீன் வழங்கக் கோரி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு மற்றும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மேலும் இவரது மனுக்கள் அனைத்தும் ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏறகனவே அறிவிப்பு வெளியான நிலையில், இன்று காலை விசாரணைக்கு வந்தது.
விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இருப்பினும் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆந்திரா நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மதிய உணவு இடைவெளிக்கு பிறகு வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.