Share via:
ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை பற்றிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகைகள் ரம்யாகிருஷ்ணன் மற்றும் ராதிகா ஆகியோர் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநில அமைச்சரான ரோஜா ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்தியநாராயணமூர்த்தி சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு அக்கட்சியின் மகளிர் அணி தலைவியும் ரோஜா குறித்து பல அவதூறுகளை பரப்பி எச்சரிக்கைவிடுக்கும் விதமாக பேசியிருந்தார்.
இதனால் வேதனையடைந்த ரோஜா கண்ணீர் விட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தது இணையத்தில் வைரலானது.
இதைத்தொடர்ந்து ரோஜா குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் ரம்யாகிருஷ்ணன் மற்றும் ரோஜா தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன் தனது வீடியோவில், ‘‘முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராணயன் பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இந்த பேச்சு என்னை காயப்படுத்தியது என்று தெரிவித்தார். மேலும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பிரச்சினை அனுபவிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்த அவர், ரோஜா குறித்து பேசியது அவரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் குறி வைத்தது போல் இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் நடிகை ராதிகா தனது வீடியோவில், ‘‘ஒரு தோழியாகவும், அரசியல்வாதியாகவும் ரோஜாவின் தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும். பெண்கள் அரசியலில் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நம் நாட்டில், ரோஜா மீதான இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் வருத்தம் அளிக்கிறது’’ என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகள் ரோஜாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிடுவார்கள் என்று இணையவாசிகள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
