Share via:
முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கனிமொழி எம்.பி., அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 14ம் தேதி (அக்டோபர்) மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான அழைப்பை கனிமொழி எம்.பி. தனித்தனியாக விடுத்துள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்த கனிமொழி எம்.பி. சென்னையில் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின் போது மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் விஜயா தாயன்பன், நாமக்கல் ராணி ஆகியோர் உள்ளனர்.
அக்டோபர் மாதம் 14ம் தேதி நடைபெற உள்ள மகளிர் உரிமை மாநாட்டிற்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பின் போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
