Share via:
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் செந்தில்பாபாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் மாதம் கைது செய்த நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட போது அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதைத்தொடர்ந்து அவருக்கு அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமலாக்கத்துறையினர் மீண்டும் தங்கள் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு அவரை புழல் சிறையில் காவலில் வைத்தனர்.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். மேலும் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்து வழக்கை வலுப்படுத்தினர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் அவரின் உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் மனுக்கள் பல முறை தாக்கல் செய்யப்பட்ட போதும் அது நிராகரிக்கப்பட்டு அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்த கொதிப்பு உள்ளிட்ட காரணங்களால் செந்தில்பாலாஜியின் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் மருத்துவமனையில் இருந்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
