Share via:
தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று கடந்த 8 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் கடந்த 8 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை (அக்.5) டி.பி.ஐ. வளாகத்திற்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அதன்பின்னர் புதுப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் தொகுப்பு ஊதியம் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும் எனவும், ரூ.10 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
