Share via:
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தாமதமாக வந்தார். இருப்பினும் அதற்கு முன்பாகவே பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கப்பட்டது.
பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொளவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார். அண்ணாமலையின் அவதூறு பேச்சுகளே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
இதற்கிடையில் சென்னையில் 3ம் தேதி நடைபெற இருந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் 5ம் தேதி நடக்கும் என ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று (அக்.5) சென்னையில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வர தாமதமானதால், கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்டோர் நீண்ட நேரமாக மேடையிலேயே அமர்ந்திருந்தனர். அண்ணாமலை வெகுநேரமாக வராத காரணத்தால் அவர் வருவதற்கு முன்பாகவே வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கேசவ விநாயகம், ‘‘பா.ஜ.க. தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநில தலைவர்களை டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரமாக கண்காணித்து வருகிறது’’ என்று பேசினார்.
அதன்பின்னர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
***********
