Share via:
டி.ஆர்.பாலு எம்.பி. தொடர்ந்து அவதூறு வழக்கில் நாளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.
இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்னிலையில் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அண்ணாமலைக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 முறை வழக்கு விசாரணையில் ஆஜராகாத அண்ணாமலை தனது வழக்கறிஞரை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் டி.ஆர்.பாலு தொடர்ந்து அவதூறு வழக்கு விசாரணை நாளை (அக்.5) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நாளை அண்ணாமலை நேரில் ஆஜராக வாய்ப்புள்ளது என்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் நாளை நீதிமன்றத்தில் அவற்றை சமர்ப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.
