Share via:
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொள்ள உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள கோஆதனூரில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இன்று நடைபெறும் விழாவுடன் சேர்த்து அதன் பின்னர் நடைபெற உள்ள பூணூல் விழாவிலும் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடதுசாரி கட்சியினர் காட்டுமன்னார் கோவிலில் திடீரென்று ஒன்று திரண்டு கருப்புக்கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘‘சனாதனத்தை உயர்த்திபிடிக்கும் ஆளுநர் கடலூரைவிட்டு வெளியேற வேண்டும் என்றும், பூணூல் விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில் அப்பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
