Share via:
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் கூடுதலாக சீட் கிடைக்கும் என்று கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் மட்டுமல்லாது ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல்களத்தை பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க.வின் கூட்டணி யாருடன் என்ற பெரியகேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து கூடுதல் இடங்களில் போட்டியிடும் என்ற பேச்சுகளும் அடிபட்டு தேர்தல்களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து செந்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘சந்தர்ப்பவாதம், சபலங்களுக்கு காங்கிரசில் இடம் கிடையாது. காங்கிரஸ் கட்சி அணி மாறும் என்று பரவிய தகவல் முற்றிலும் தவறானது. இதை பரப்பியது அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான். இந்தியா கூட்டணி சிதற வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய ஆசையாக உள்ளது. ஆனால் எங்கள் கூட்டணி மிகவும் வலிமை வாய்ந்த கூட்டணி மற்றும் கொள்கை சார்ந்த கூட்டணி என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் விரோத மோடி அரசை துரத்த வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக மிகவும் உறுதியுடன் கே.எஸ்.அழகிரி தெரிவித்துக் கொண்டார்.
அக்டோபர் 14ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகை தர உள்ளார். மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில் கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து தொகுதி பங்கீடு குறித்த ஒரு நிலைப்பாட்டை தி.மு.க.வினர் மத்தியில் ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது
