Share via:
குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஊட்டிக்கு நேற்று முன்தினம் பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து மரப்பாலம் அருகே 9வது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊரான கடையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக் கொண்ட உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக கொட்டும் மழையில் இறுதிச்சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு அவரவர் முறைப்படி தகனம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்டன.
தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
