Share via:
நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்பும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
உலக விஞ்ஞானிகளை இருக்கையின் நுணிக்கே கொண்டு வரும் தருணமாக தரை இறங்கிய 2 மணி நேரத்திற்குபிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து தனது ஆய்வுப்பணிகளை செவ்வனே செய்து வருகிறது.
அந்த ஆய்வில் ரோவரில் பொருத்தப்பட்டிருந்த லிப்ஸ் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், அலுமினிய், கால்சியம், இரும்பு, குரோமியம் உள்ளிட்ட கனிமங்களும் நிலவில் இருப்பதை ரோவர் உறுதி செய்து பல்வேறு கோணங்களில் இருந்து புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவுநாள் (14 நாட்கள்) முடிவடைந்து அங்கு இரவு தொடங்கிய போது ரோவர் எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் உறக்க நிலைக்கு சென்றது. மேலும் விக்ரம் லேண்டரும் உறக்கநிலைக்கு சென்றது.
அந்த நேரத்தில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சத்தால் சார்ஜ் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி கடந்த செப்.10ம் தேதி படத்தொடங்கியது. அப்போது உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டரை விழிப்பு நிலைக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்றுடன் (செப்.30) நிலவில் சூரியன் மறையத் தொடங்க இருக்கிறது. இதன் காரணமாக லேண்டரையும், ரோவரையும் எழுப்ப இதுவே கடைசி வாய்ப்பு என்று கருதப்படுகிறது. ஒருவேளை இம்முயற்சி தோல்வியடைந்துவிட்டால், இனி லேண்டரையும், ரோவரையும் மீண்டும் எழுப்ப சாத்தியமில்லாமல் போய்விடும் என்ற அச்சமும் நிலவுகிறது. சந்திராயன்3 அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை ஏற்கனவே அது 100% நிறைவு செய்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் லேண்டரையும், ரோவரையும் எழுப்புவதற்கான தீவிர முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
