Share via:
தமிழகத்திற்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று ஆலோசனைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கர்நாடக மாநிலம் வருகிற அக்டோபர் மாதம் 15 வரையில் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் 3,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் அசவுகரியமான சூழ்நிலையில் இந்த உத்தரவு எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் உள்ளது என்று கர்நாடக மாநில போராட்ட அமைப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
