Share via:
கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நீரை திறந்துவிட அம்மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 26ம் தேதி (செப்.) பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பெங்களூரில் அன்று 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு 2000க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், பேருந்துகள், பெட்ரோல் பங்குகள் என அனைத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூர் முழு அடைப்பைத் தொடர்ந்து இன்றும் கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெங்களூருவில் 144 தடை உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை சனிக்கிழமை இரவு 12 மணிவரை இருக்கும் என்று மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநில முழு அடைப்புக்கு 900க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை காக்கவும் டி.ஜி.பி.அலோக் மோகன் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் 500 பேருந்துகள் ஓசூரில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் சோதனைக்கு பின்னர் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நீலகிரி தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் 3வது முறையாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.