Share via:
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் 260க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இருப்பினும், என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். சனாதனத்தை எதிர்த்து எனது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று அமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வினித் ஜிடால் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். நீதிபதி அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில், இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 40 ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று வாதிப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து உரிய பதில் அளிக்க டெல்லி காவல் ஆணையருக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும் ஏற்கனவே தொடரப்பட்ட சனாதன விவகாரம் குறித்த மனுக்களுடன் இந்த மனுவை சேர்க்க நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.