Share via:
நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்களான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பிருந்தா காரத் ஆகிய பெண் பிரபலங்களை கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்பிரியா சுலே, சுபாஷினி அலி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தரும் சோனியா காந்தியிடம் தி.மு.க.வுடனான 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முக்கிய விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோருடன் சோனியா காந்தி கலந்து கொள்வார் என்றும் தெரிய வந்துள்ளது.
சோனியா காந்தி இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.