Share via:
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போன்று கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவரும், அக்கட்சியின்
மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றியவருமான சி. மகேந்திரன், விஜய் தலைமையிலான தமிழக
வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். சி. மகேந்திரன் தமிழக இடதுசாரி இயக்கங்களில் மிகவும்
மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல தசாப்தங்களாகத்
தீவிரமாகப் பணியாற்றியவர். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலத் துணைச்
செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். மேடைப் பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், மற்றும் சிந்தனையாளர்
எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.
பொதுவுடைமைக் கோட்பாடுகளில் ஆழமான ஈடுபாடு கொண்ட இவர், தமிழகத்தின் பல்வேறு சமூக, பொருளாதாரப்
போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். குறிப்பாக, விவசாயப் பிரச்சினைகள், தொழிலாளர்
உரிமைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாக ஒலித்தவர். கடந்த காலங்களில் ஆர். கே.
நகர் இடைத்தேர்தல் உள்ளிட்ட முக்கியத் தேர்தல்களில் இடதுசாரி முன்னணியின் வேட்பாளராகக்
களம் கண்ட அனுபவமும் இவருக்கு உண்டு. இத்தகைய ஆழமான அரசியல் பின்புலம் கொண்ட ஒருவர்
தவெகவில் இணைந்திருப்பது பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
தவெகவில் இணைந்தபிறகு, ‘’கம்யூனிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை.
அதைப் பின்பற்றுவதற்கான சாத்தியம் தற்போதைய சூழ்நிலையில் மற்றக் கட்சிகளை விட தவெகவில்
மட்டுமே உள்ளது சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன் இந்த தேர்தலில் சாதி
தோற்கடிக்கப்பட்டுள்ளதை வியந்து பார்க்கிறேன்.
ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி யார் வேண்டுமானாலும் தேர்தலில்
நின்று வெற்றி பெற முடியும் என்பதை விஜய் காட்டியுள்ளார்’’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
இந்த நிலையல் தினமும் நடிகர், நடிகைகள் சந்திப்பதில் ஆர்வமாக இருக்கும்
விஜய், தன் கட்சியில் இணைய வந்த மூத்த தலைவரைக்
கூட மதிக்கவில்லை என்பது பெரும் ஆச்சர்யம்தான்.
அதேநேரம், சி.மகேந்திரன் ஊழல் பெருச்சாளி என்றும் விமர்சனம் வெளியாகியுள்ளது.
அதாவது, 2023ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லா பதவிகளிலிருந்தும்
வெளியேற்றப்பட்டவர் சி மகேந்திரன். அவர் இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் வெறும் உறுப்பினர்
மட்டும்தான்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் நிதியை கையாடல் செய்ததால்
கட்சிக்குள் நுழைய விடவில்லை. அதனால்தான் தவெகவில் சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
முக்கியப் புள்ளியைத் தூக்கி அந்த கட்சிக்கே சவால் விட்டிருக்கிறார். கூட்டணிக் கட்சி மடியிலேயே கை வைத்த தவெகவுக்கு இனியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுக்குமா..?
