Share via:
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்
அதிரடி இடமாற்றம் பற்றிய அறிவிப்பு தினமும் வெளியாகிவருகிறது. டிஜிபி, ஏடிஜிபி அந்தஸ்தில்
உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முன்னாள் டிஜிபியான சங்கர் ஜிவால் தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின்
தலைவர் பதவியில் இருந்தார். இவர் கடந்த ஆண்டு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி (காவல்துறை
தலைவர்) ஓய்வு பெற்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்த பிரிவை திமுக அரசு உருவாக்கி
சங்கர் ஜிவாலுக்கு இந்த பொறுப்பை வழங்கியது. கடந்த 9 மாதங்களாக அவர் தீயணைப்பு ஆணைய
தலைவராக பதவி வகித்த நிலையில் தவெக ஆட்சி மாற்றத்தால் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தமிழ்நாடு தீ மற்றும் மீட்பு சேவைகளின் டிஜிபியாக இருக்கும்
சீமா அகர்வால் தீயணைப்பு ஆணைய தலைவராகவும் செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த சந்தீப்
மிட்டல் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவலர் அகாடமியின் இயக்குநர் தினகரன், ஆயுதப்படை ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு என்பது போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு
மற்றும் மீட்பு சேவைகள் பிரிவிற்கான ஆட்சேர்ப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதன்
தலைவராக ஓய்வு பெற்ற சுனில் குமாரை திமுக அரசு நியமித்து இருந்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த
நிலையில் கடந்த 17 ம் தேதி சுனில் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆயுதப்படை
டிஜிபியாக இருந்த சந்தீப் மிட்டல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக
மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் மாற்றம் செய்யப்பட்டால் ஆயுதப்படை டிஜிபி
பொறுப்பு காலியானது. இவர் தான் தமிழக ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார்.
அவரது இடமாற்றம் காரணமாக தலைவர் தேவையாக உள்ளது. இதனால் தற்போது
ஆயுதப்படை தலைவர் டிஜிபி என்பதை ஏடிஜிபியாக மாற்றம் செய்து ஏடிஜிபி அந்தஸ்து கொண்டவரின்
தலைமையில் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தான் அந்த இடத்துக்கு
ஏடிஜிபி தினகரன் ஐபிஎஸ்ஸை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக இருந்த ஜெயசீலன் சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக ஸ்ரேயா சிங் புதிய இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது போல்
சிவகங்கை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரைக்கும், அங்கிருந்த ஆகாஷ் ஐஏஎஸ் சிவகங்கைக்கும்
மாற்றப்பட்டார்.
அது போல் விடுப்பில் இருந்த இன்னசென்ட் திவ்யா, கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராக
கவிரா ராமு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநகர போக்குவரத்து கழக இயக்குநராக இருந்த
பிரபாகர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக மாற்றப்பட்டார். பிரபாகருக்கு
பதிலாக சுரங்கத் துறையில் இருந்த மோகன் ஐஏஎஸ் மாநகர போக்குவரத்திற்கு மாற்றப்பட்டார்.
ஈரோடு வணிக வரித் துறை இணை ஆணையர் பொன்மணி, அறநிலையத் துறை கூடுதல்
ஆணையராக (திருச்சி) மாற்றப்பட்டார். தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்
இயக்குநராக ரமண சரஸ்வதி நியமிக்கப்பட்டார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பந்தாட்டம் நடக்குமோ..?
