Share via:
5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டித்து தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 19ம் தேதி தொடங்கப்பட்ட காலாண்டு தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடக்கிறது. அதோடு 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த 15ம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 27ம் தேதிக்கு முடிகிறது. அதைத்தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்த 5 நாட்களில் செப்.28ம் தேதி மிலாடி நபி, செப். 30 சனிக்கிழமை, அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர்&2 காந்தி ஜெயந்தி, மீதியுள்ள செப்.29ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை என்று பார்க்கப்பட்டது.
அதன்படி காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் எண்ணும் எழுத்து பயிற்சி மற்றும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பயிற்சியும் மேற்கொள்ளப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை அறிவித்தது. இத்திட்டத்தை நல்ல முறையில் செய்து முடிக்க காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். ஆனால் 6 ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்னர் அறிவித்தபடியே அக்டோபர் மாதம் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.