Share via:
இன்று தன்னுடைய அரசியல் நுழைவு
பற்றி அறிவிப்பதாகக் கூறியிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், மக்கள் முடிவு கேட்டபிறகு
நுழைவதாக புதுசாக ரீல் விட்டிருக்கிறார். ஏனென்றால், விஜய் கட்சியில் திருச்சி வேட்பாளராக
ராகவா லாரன்ஸ் நிற்பது உறுதியாகிவிட்டதாகத் தகவல் தெரிவிக்கிறார்கள்.
அரசியல் நுழைவு குறித்து லாரன்ஸ்,
‘’நான்
அரசியலில் நுழைவேன் என்று ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. பணம் சம்பாதிக்கும் எண்ணமோ
அல்லது தேர்தலில் போட்டியிடும் எண்ணமோ எனக்கு இருந்ததில்லை, நான் நம்பும், எனக்கு நெருக்கமான
ஒருவர் அரசியலில் நுழைந்தால், நான் ஒரு தனிநபராகச் செய்து வருவதை விடப் பெரிய அளவில்
சமூகத்திற்குச் சேவை செய்ய, அவர்களுக்குத் துணையாக நின்று அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்
என்பது மட்டுமே என் ஒரே எண்ணமாக இருந்தது.
இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக்
கொண்டு வந்துள்ளன. நான் ஏன் அரசியல் வருகிறேன் என்று இன்று காலை 10 மணிக்கு வீடியோ
வாயிலாக எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன்…’’ என்று கூறியிருந்தார்.
ஆனால், இன்று அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ‘’அரசியலில்
இணைய நான் தயாராக உள்ளேன். அரசியலில் இணையலாமா? வேண்டாமா? என்பதை மக்களாகிய நீங்களே
முடிவெடுத்து சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை கேட்ட பிறகு என் முடிவைத் தெரிவிக்கிறேன்.
ரஜினியை போல் விஜயும் எனக்கும் நெருக்கம். முன்பு விஜய்யிடம்,
’’அம்மா அரசியல் போக வேண்டாம் அது சாக்கடை எனக் கூறுகிறார்கள்’’ என்று கூறினேன். அதற்கு
நண்பர் விஜய் “கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அவங்களுக்கு புரியாது” என்று கூறினார்.
விஜய் ஜெயித்தவுடன் எனது அம்மாவிடம் பணத்தை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது,
அதுக்கு நண்பர் விஜய் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினேன்’’ என்று பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் திருச்சி
கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதி என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சராக பொறுப்பேற்கப் போகிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
எல்லாம் முடிவு செய்தபிறகு மக்களிடம் கருத்து கேட்பது என்பது சும்மா
உடான்ஸ் என்கிறார்கள். அதுசரி ரீல்ஸ் யுகத்தில், இப்படி வந்தால்தான் ஜெயிக்க முடியும்
என்று கூறியிருப்பார்கள். அதையே செய்கிறார்.
