Share via:
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் எல்லோரையும் விஜய் வரவழைத்து கட்சியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதேபோல் சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன. இது தான் “மாடர்ன் மனுநீதிச் சோழன்” ஆட்சியா?
இப்படி ஒரு வார்த்தையை சொல்ல இன்றைய ஆளுங்கட்சி ஆச்சரியக்குறிகளுக்கு வெட்கமே இல்லையா? அமைதிப்படை நாகராஜசோழனை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடக்கிறது. குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமானதை சுட்டிக் காட்டினால், தன் மீது வீண் பழி சுமத்துவதாக கூறும் இன்றைய முதலமைச்சர், கடந்த 1 மாதமாக தொடர்ச்சியாக அவரது கட்சிக்காரர்களே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோன்று, ‘’விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் 19.6.2026 வெள்ளிக் கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து அதிமுகவினர், ‘’மின்வெட்டு, பயிர்க் கடன் தள்ளுபடி போன்ற மக்கள் பிரச்சினைகள் இரண்டு வாரங்களாக கொழுந்துவிட்டு எரிகிறது. ஆனால் இபிஎஸ் போராட்ட அறிவிப்பின் வேகம் மட்டும் ஆமை வேகத்தில் இருக்கிறது. நேற்று அறிவித்து, ஒரு வாரம் கழித்து போராட்டமா? அதற்குள் அரசு ஏதாவது அறிவித்துவிட்டால் உங்கள் போராட்டம் நீர்த்துப் போய்விடாதா? இதே தாமதமான அரசியல்தான் கடந்த 5 ஆண்டுகளிலும் மக்களிடம் எடுபடவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு தேவை வேகமும் வீரியமும் இல்லை’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.
v