Share via:
தவெக ஆட்சியில் பங்கேற்றுள்ள நிலையில், ‘நாங்கள் இன்னும் தவெக
கூட்டணியில் சேரவில்லை. தவெகவின் சந்தேகத்தைப் போக்கவே அமைச்சரவையில் சேர்ந்தோம். அமைச்சரவைக்குச்
செல்ல உரிமை இருப்பது போல, வெளியே வரவும் உரிமை உள்ளது’ என்று பேசியிருக்கும் விவகாரம்
செம சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
மேலும் திருமா, ‘’தேர்தலுக்கு முன்பு வரை தமிழக வெற்றி கழகத்தின்
மீது எனக்கு சந்தேகம் இருந்தது உண்மைதான். ஆனால் தேர்தலுக்குப் பின் அவர்கள் இடதுசாரிகள்
மற்றும் விடுதலை சிறுத்தைகள் நோக்கி வந்ததால், எங்களது ஆதரவை நேரடியாகவே தெரிவித்துள்ளேன்.’’
என்று கூறியிருப்பதுடன், ‘’நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததும் நாங்கள்
கண்டித்தோம். நாங்கள் அப்படி செய்யவில்லை என்றால் 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பார்கள்’’
என்றும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’‘தவெகவின் சந்தேகத்தைப்
போக்க அமைச்சரவையில் சேர்ந்தோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது, மிகப்
பெரிய முரண்பாடாகத் தோன்றுகிறது. ஒரு கூட்டணியில் இணைவதற்கான காரணம் கொள்கை, மக்கள்
நலன், அரசியல் இலக்கு ஆகியவையாக இருக்க வேண்டுமே தவிர, மற்றொரு கட்சியின் ‘சந்தேகத்தைப்
போக்குவது’ அல்ல.
அதேபோல் கண்டிக்கவில்லை என்றால் 20 பேருக்கு மேல் ராஜினாமா செய்திருப்பார்கள்
என்று சொல்கிறார். அப்படி என்றால் அங்கு குதிரை
பேரம் நடந்து உள்ளது என்பதுதானே அர்த்தம். அந்த குதிரை பேரத்தை ஏன் கண்டித்தார். விஜய்
ஆட்சியில் விசிகவுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் போய்விடும் என்றுதானே பதறியிருக்கிறார்.
நியாயமான தலைவராக அறியப்பட்ட திருமாவளவன் இப்போது கோமாளியாக காட்சியளிக்கிறார்’’ என்று
திருமாவை விளாசுகிறார்கள்.
அமைச்சரவையில் இருந்து வன்னியரசு வெளியேறப்போகிறாரா என்ற கேள்விக்கு
அவர், ‘’ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு; அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது
வேறு. அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது
தான் திருமாவளவன் அவர்களின் கருத்து. இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்’’
என்று கூறியிருக்கிறார்.
அதேபோல் ஆதவ் அர்ஜூனா, ‘’”நான் திருமாவளவன் அண்ணிடம் பேசினேன்,
என்னால் தவெக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது, திமுக செய்யும் பொய் பிரச்சாரங்களுக்கு
நான் பதில் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்” என்று கூறியிருக்கிறார்.
தவெக சார்பில் பேசுபவர்கள், ’’இடைத்தேர்தலில் சீட் எதிர்பார்க்கிறார்
திருமாவளவன். அதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்ததும் விஜய்யை மிரட்டிப் பார்க்கிறார்.
ஆனால், விசிக தயவில் தவெக இல்லை என்பதால், மிரட்டல் எடுபடாது’’ என்கிறார்கள்.