Share via:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான
இடைத்தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில்
மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று
தவெக தலைவர் விஜய் அறிவிப்பு செய்திருப்பது, அக்கட்சியினருக்கு பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
.
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய், “வருகிற அக்டோபர் 6 அன்று
நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தவெக வேட்பாளர்களாக மதுராந்தகம்
(தனி) – மரகதம் குமாரவேல், தவெக துணைப் பொதுச் செயலாளர், தாராபுரம் (தனி) – சத்தியபாமா,
திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தவெகவினர்
அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து,
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத்தர வேண்டுகிறேன்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல்
சூழல் காரணமாக அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா
செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம்
மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம்
இசக்கி சுப்பையா, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர்
தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம்
கடிதம் கொடுத்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர்
ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டதையடுத்து அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தவெக ஆட்சி அமைந்த
பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வேட்புமனு தொடங்கிய நாளான நேற்று, திமுக இந்த இரண்டு தொகுதிகளுக்கும்
வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகத்தில் இ.பரந்தாமன், தாராபுரத்தில் எஸ்.சுகன்யா
ஆகியோரை திமுக வேட்பாளர்களாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து தவெகவும் இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தவெக வேட்பாளர்கள் இருவருமே அத்தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் பதவியை ராஜினாமா
செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் விஜய்யை நம்பி பதவியை ராஜினாமா செய்தவர்கள். எனவே, அவர்களுக்கு
வாக்கு கொடுத்தது போலவே சீட்டு கொடுத்திருக்கிறார். கடந்த முறை அதிமுகவில் நின்று ஜெயித்தவர்கள்
இந்த முறை விசிலில் நின்று ஜெயிப்பார்கள் என்று விஜய் கட்சியினர் உறுதியாக இருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் வெற்றி அடைந்தால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மேலும் பலர் விஜய் கட்சியில்
இணைவார்கள் என்றே தெரிகிறது.

