Share via:
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் புதிய தலைமை செயலகம் கட்டப்படும்
என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, புதிய தலைமை செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில்
கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் வீட்டுக்கும் பீச்சுக்கும்
நடுவில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
தலைமைச் செயலகத்திற்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான
21.76 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இதைத் தவிர்த்து சென்னை மாநகராட்சி
மற்றும் வருவாய் துறை நிலங்களையும் கையகப்படுத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமையக்கூடாது என மீனவ சங்கங்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், மீனவர்களை நேரில் சந்தித்து விஜய் சமாதானப்படுத்துவார்
என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இந்த இடம் மக்கள் வந்துசெல்ல ஏதுவான இடமாக இருந்தாலும்
இம்மாதிரியான வளாகத்தை கட்டுவதற்கான பொருத்தமான இடமில்லை என்று ஒரு பேச்சு எழுந்துள்ளது.
இப்பொழுதே, வார நாட்களில், எந்த நேரமாக இருந்தாலும்,
பட்டினப்பாக்கம் சந்திப்பை கடப்பது போராட்டமாக உள்ளது. சாந்தோம் பகுதியில் பள்ளிகள்
இருக்கின்றன. இச்சந்திப்பிலிருந்து சாலையின் அகலம் அவ்வளவு போதியமானதாக இல்லை என்கிறார்கள்.
ஆனால், பட்டினப்பாக்கத்தில் இருந்து அடையாறு வரையிலும் பாலம் கட்டப்பட
இருப்பதால், கூட்ட நெரிசல் இருக்காது என்று சமாதானம் செய்யப்படுகிறது. அதேநேரம், சென்னை
பட்டினம்பாக்கத்தில் அவசரகதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தவெக அரசு
கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தினகரன், ‘’புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை
மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை
எழுப்புகிறது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம்
பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மேலும்,
குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை
விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம்
அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின்
அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட
பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான
மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம்
அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள்
என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து
மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது.
மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள
நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே
ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து
வருகின்றனர். இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு
தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும்
நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது…’’ என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சமாளிப்பார் என்றே நம்புவோம்.

