Share via:
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்
நடத்தவேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு
அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தவெக ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த தேர்தலில்
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதனால் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை
உறுப்பினர் பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை
எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் லட்சுமி
நரசிம்மன், தினேஷ் ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்குத் தொகுதியில்
திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதேபோல, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி
பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்காளர் ஆர்.சிவராஜ் என்பவர் தேர்தல்
வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கடந்த முறை விசாரணைக்கு
வந்தது. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்
என்று முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள்
மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்
கோரி விஜய், ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் விஜயின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர்
தினேஷ் தொடர்ந்த வழக்கும், ஆதவ் அர்ஜுனா வெற்றியை எதிர்த்து சிவராஜ் தொடர்ந்த தேர்தல்
வழக்குகளும் இன்று இன்று விசாரணைக்கு வந்தது. இதில், 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட
தடையை நீக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை
அறிவிக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொகுதியின்
மக்கள் எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சீக்கிரம் இடைத்தேர்தல் நடத்தினால் பெரும்பான்மை பெற முடியும் என்று நினைக்கிறாராம்
விஜய். என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.

