Share via:
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும், மேகதாது திட்டத்தை நிறுத்த
வேண்டும் என்று ராகுல் காந்தி குரல் கொடுக்க வேண்டும். அப்படி பேசினால் நான் பாஜக கூட்டணியில்
இருந்து வெளியே வந்துவிடுகிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி பேசியிருந்தார்.
மேலும் அன்புமணி, “அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சிறிய அளவில்
காட்டை அழித்து உருவாக்கப்படும் ‘கிரேட் நிக்கோபர்’ என்ற மத்திய அரசின் திட்டத்தை ராகுல்காந்தி
எதிர்க்கிறார். அந்த உணர்வை நான் புரிந்துக் கொள்கிறேன். அதை நான் ஏற்றும் கொள்கிறேன்.
ஆனால், மேகதாது அணை கட்டினால் 12500 ஏக்கர் காட்டை அழித்துத்தான்
கட்ட முடியம். இதையும் ராகுல் காந்தி அவர்கள் எதிர்க்க வேண்டும். மேகதாது அணை கட்ட
மாட்டார்கள் என்று ராகுல் காந்தி அவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகத்திற்கு வரும்போது
சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசுதான் அங்கு ஆள்கிறது; இவர் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்.”
என்று பேசியிருந்தார்.
மாணிக்கம் தாகூரின் சீண்டலுக்கு அன்புமணி, ‘’எங்களிடம் கையை மடித்து
காட்ட வேண்டாம். ராணுவத்தையே பார்த்தவர்கள் நாங்கள். தனித்தே நின்று பல சட்டமன்ற உறுப்பினர்களை
உருவாக்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் ஒரே ஒரு கவுன்சிலரை கூட உங்களால் உருவாக்க
முடியாது..’’ என்று எச்சரிக்கை செய்தார்.
இதற்கு மாணிக்கம் தாகூர், ‘’நீங்கள் பாஜக கூட்டணியில் இருப்பதால்
பிரதமர் மோடியிடம் சொல்லி, மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்துங்கள். இந்த விஷயத்தில்
பிரதமரைக் கேட்கும் தைரியம் இருக்கிறதா?’’ என்று கொதித்திருக்கிரார்.
மேலும் அவர், ‘’காங்கிரஸ் குறித்தும் தலைவர் ராகுல் காந்தி குறித்தும் பாமக தலைவர் அன்புமணி தொடர்ந்து அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தனித்து நின்று காங்கிரஸால் ஒரு கவுன்சிலர் சீட்டைக் கூடப் பெற முடியாது என்கிறார். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தனித்து 234 தொகுதிகளில் நின்று பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லையே. திமுக அல்லது அதிமுகவின் முதுகில் சவாரி செய்துதானே 2 இடங்களிலும் 4 இடங்களிலும் பாமக வெற்றி பெற்று வருகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் பாமக கோட்டை என்று நீங்களே தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த தருமபுரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தீர்களே? 2024 மக்களவை தேர்தலில் உங்கள் மனைவி சௌமியா அன்புமணி அதே தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்தாரே? தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு பாமகவுக்கு உண்டா?
கடந்த
தேர்தலில் கூட பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அதிமுகவே காரணம். அதோடு அதிமுகவின் தயவால்தான் மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஒரு கட்சியைத் தேர்தலை வைத்துத் தாழ்த்த அன்புமணிக்குத் தகுதியில்லை. காவிரி பிரச்சினையில் தமிழக காங்கிரஸின் நிலையை, சட்டப்பேரவையில் காங்கிரஸின் அமைச்சர் ராஜேஷ்குமார் தெளிவுபடுத்திவிட்டார். தேசிய கட்சியின் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக எப்போதாவது பேசியிருக்கிறாரா?
அன்புமணி என்பவர் 4 மாவட்டங்களுக்குள் முடங்கிப் போன தலைவர். ஆனால், இந்தியாவுக்குமான தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். அவரை ஒரு மாநிலத்துக்குள் முடக்கிவிட முடியாது. அப்பாவால் அரசியலுக்கு வந்து, அவருக்கு எதிராக அரசியல் செய்து, இப்போது மீண்டும் தலைவராகி இருக்கும் அன்புமணி அவர்களே! இனியாவது காங்கிரஸை தாழ்த்திப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’’ என்று பேசியிருக்கிறார்.
அதாவது ராகுல் தமிழருக்காக பேச மாட்டார் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார்
மாணிக்கம் தாகூர்.
