Share via:
இன்று காலை அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி
கூட்டணியில் இணைந்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் அன்புமணிக்கு 17 சீட் மற்றும்
1 ராஜ்யசபா சீட் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ராமதாஸ்க்கு 5 சீட் கொடுக்கவும்
திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.
கிரீன்வேஸ் சாலை எடப்பாடி
பழனிசாமிஇல்லத்தில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியதை அடுத்து
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ’’வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக,
பாஜக இடையிலான கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள்
விரைவில் சேர்க்கப்படும்.
எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி. எங்கள் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும்
விரும்பியவாறு இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதேபோல பாமகவும் அவர்களின் தொண்டர்கள்
நிர்வாகிகள் விரும்பியவாறு இரண்டு கட்சியில் இருக்கிற தொண்டர்கள், நிர்வாகிகள், தலைவர்கள்
இணைந்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றிக்கூட்டணி.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை
அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க மக்களுக்கு
தேவையான திட்டங்களை கொடுக்கின்ற ஒரு அரசாக, எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான
இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையோடு
ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக, பாஜக, பாமக மூன்று கட்சிகளும் இணைந்து தேனீக்களைப்போல
இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு எங்கள் கூட்டணியில் தற்போது பாமக இணைந்திருக்கிறது.
தொகுதியின் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவற்றை பிறகு அறிவிப்போம்…’’
என்றார்.
எத்தனை தொகுதி என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும்
17 தொகுதிகள் அன்புமணிக்கும் 5 தொகுதிகள் ராமதாஸ்க்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. அதேபோல் அன்புமணிக்கு ஏப்ரல் மாதம் ராஜ்யசபா சீட் கொடுப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை டாக்டர் ராமதாஸ் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்.
ஐந்து சீட்டுக்கு ஒப்புக்கொள்வாரா அல்லது திமுக பக்கம் சாய்வாரா என்று பார்க்கலாம்.