Share via:
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கொரனா உதவித் தொகை நாலாயிரம் ரூபாய்,
மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம், பொங்கல் பரிசாக மூன்றாயிரம் என்று ஸ்டாலின் கொடுத்திருப்பதால்,
இந்த தேர்தலில் மக்கள் திமுகவை கைவிட மாட்டார்கள் என்று நிர்வாகிகள் செம குஷியாக இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளிலும் பொங்கலுக்கு ஆயிரம்
ரூபாய் கொடுத்த ஸ்டாலின், அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவும் கொடுக்கவில்லை. இப்போது
தேர்தல் நெருங்குவதால் கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
இந்த வகையில், தமிழகம் முழுவதும் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கிவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆலந்தூரில் பொங்கல் தொகுப்பு, ரூ.3 ஆயிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு
மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றுடன் வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை
செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் மற்றும் 1 கோடியே
77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்க தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’இந்த ஆட்சியில் மாதம் ஆயிரம்
ரூபாய் மற்றும் இலவச பஸ் செம ஹிட் அடித்துள்ளது. இப்போது தேர்தலையொட்டி 3 ஆயிரம் ரூபாய்
கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக்கியுள்ளது. ஆகவே, வழக்கத்தை
விட அதிகம் வாக்குகளுடன் திமுக வெற்றிபெறும் என்கிறார்கள்.
அதேநேரம் எதிர்க்கட்சியினர், ‘’திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக
சரித்திரம் இல்லை. அது இப்போதும் தொடரும். வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. 5 ஆயிரம் கொடுத்திருந்தால்
நல்லது நடந்திருக்கும், இப்போது மக்கள் ஏமாற்றமே அடைந்திருக்கிறார்கள். கொள்ளை ஆட்சி
வீட்டுக்குப் போகிறது. அதிமுக மெகா கூட்டணில் திமுக காணாமல் போய்விடும்’’ என்கிறார்கள்.
மூவாயிரம் ரூபாய் ஓட்டாக மாறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.