Share via:
ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் யாருடன்
கூட்டணி என்று அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
ஆனால், இதுவரை பேரம் படியாத காரணத்தால் கூட்டணி அறிவிப்பு இல்லாமல் நழுவிவிட்டார்.
இந்த முறை விஜய் கட்சியிலும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதால் பேரம் பலமாக இருக்கும்
என்கிறார்கள்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் மாநாட்டில் பிரேமலதாவுக்கு கிரீடம்,
வாள் பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டு ஆவேசமாகப் பேசினார் பிரேமலதா. அதாவது,
‘’இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு இணை வேறு
கட்சியே இல்லை. நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள்
அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள். ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப்
பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள்.
விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது.
இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த
மாநாடு. தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள்.
அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன்
தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல்
தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி
பெறும்.
எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன்
யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச்
சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன்.
மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன்.
யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க
வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில்,
நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக
வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன்
முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்?” என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள், ‘’கடலூர் மாநாட்டில் கூட்டணி
குறித்து அறிவிக்கப்படும் என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லியவர், மேடையில் அறிவிப்பதை போல தோற்றம் காட்டி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு
ஜகா வாங்கிவிட்டார்.
கூட்டணி குறித்து அறிவிக்கப்போவதில்லை என்று உறுதியான பிறகு, அதை
தொண்டர்களிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கலாமே. அதை ஏன் செய்யவில்லை..? ஏனென்றால்
கூட்டம் கூடாது.
விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் இன்னும் அரசியல் முதிர்சியற்றவராக
அடாவடித்தனமான மரியாதையற்ற முறையில் பேசினார். கேப்டன் கொள்கை என்ன? மக்களை தங்க தட்டில்
வைத்து தாலாட்டுவேன் என்றார் அது தான் கொள்கை என விளக்கமளித்தார். இதையெல்லாம் பார்த்தால்
கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இவர்களுக்கு எப்படி இந்த தைரியம்
வருகிறது என்று அதிசயப்பட வேண்டியதில்லை.
பாஜக அரசியல் உறவு கொடுக்கும் தைரியம் தான் பிரேமலதா அவர்களின்
அடாவடித்தனத்திற்கான அடிப்படையாகும். மதவாத எதிர்ப்பு இந்தியா கூட்டணிக்கு இவர்கள்
ஒரு போதும் வரமாட்டார்கள். ஆனால், திமுகவை ஒரு துருப்புச் சீட்டாக்கி அதிமுகவிடம் அதிக
சீட் கேட்பார்கள்.
ஒ.ட்டுமொத்த அரசியலுமே சாக்கடையாக இருப்பதால் தேமுதிகவும் அந்த குட்டையில் ஒன்றாகத் தானே இருக்க
முடியும் விதி விலக்காக எப்படி இருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.