Share via:
சனாதன சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றது. இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது என்றும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் சனாதனத்தை எதிர்த்து என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன்’’ என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் உதயநிதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட நிபுணர்கள், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 262க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் நீதிபதிகள் முன்பு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அ¬த்தான் சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி பேசியதை சுட்டிக்காட்டி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.
இதை கவனித்த நீதிபதிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி, சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும். அதோடு சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.