Share via:
வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.
போலீசாரை ஏவி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று குற்றம்சாட்டிய நிலையில் மாணவர்களின் போராட்டம் அந்நாட்டின் தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக வாகனங்கள், கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த போலீசார் கையெறி குண்டுகளை வீசியதால் கிளர்ச்சி ஏற்பட்டது.
இதற்கிடையில் முப்படை தளபதிகள், காவல்துறை தலைவர் உட்பட பல்வேறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்த பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் கிடையாது. அவர்கள் தீவிரவாதிகள் என்றும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்ததால் ஊடரங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் 98 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து வங்கதேசத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.
இதனால் வங்கதேச மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு ஹெலிகாப்டரில் டாக்கா அரண்மனையை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் பரவத்தொடங்கின.
அதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் அவர் ஹெலிகாப்டரில் பயணிப்பது போன்ற வீடியோ வைரலானது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. அவருக்கு இந்தியா தஞ்சம் கொடுக்குமா என்ற பேச்சு சர்வதேச அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.