Share via:
வருமானத்துக்கு அதிகமாக
சொத்துக்குவிப்பு செய்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையினர்
தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள்
உத்தரவு பிறப்பித்திருந்தன.
இந்த உத்தரவுகளை
மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த விடுவிப்புக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை
விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். கடந்த
மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை தொடங்கியது.
இதையடுத்து அமைச்சர்கள்
தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு
விசாரணையும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர்கள்
இருவரையும் விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை அதிகாரி, சாட்சியங்களை வேறு வகையில் பதிவு செய்ததாகவும்,
முக்கியத் தவறு நடந்திருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
ஆகவே, விருதுநகர்
மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும்
சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முதலில் இருந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்
என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணைக்காக
அமைச்சர்கள் இருவரும் வரும் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு
பிறப்பித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தி.மு.க. அதிகார மீறல் செய்திருப்பதாக நீதிபதி
நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது, கட்சியிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
எனவே கட்சியினர் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்