Share via:
சின்னத்திரை நடிகையும் விஜேவுமாக இருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சித்ரா, கோழை கிடையாது. அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கருத்து தெரிவித்தனர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிரபல சீரியலில் நடிப்பதற்காக அவர் தங்கியிருந்த போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது. மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இவ்வழக்கானது திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கடந்த சில வருடங்களாக பலதரப்பட்ட விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில் இன்று (ஆகஸ்ட்10) தீர்ப்பு வழங்கப்பட்டது.
கணவர் ஹேம்நாத் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், அவர் நிரபராதி என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே போல் ஹேம்நாத் உள்பட 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.