Share via:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அம்மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் தற்போது அண்டை மாநிலங்களையும் அச்சத்தில் ஆழத்தியுள்ளது. இதுவரை நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகியுள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தை உலுக்கிக் கொண்டு நிபா வைரஸ் எதிரொலியாக கோழிக்கோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதியாகவும், தனிமைப்படுத்தப்பட்டு பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கேரள மாநில எல்லைகளை கடந்து வரும் அனைத்து வாகனங்களும் மற்ற மாநில எல்லைகளில் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.