Share via:
மெரினா கலங்கரை விளக்கம் முதல் போரூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போரூர், ஆற்காடு சாலையில் மேம்பால தூண் அமைக்கும் பணிக்காக ராட்சத துளையிடும் எந்திரத்தை பயன்படுத்தினார்கள். 100 டன் எடை கொண்ட ராட்சத துளையிடும் எந்திரம், சுமார் 200 அடி உயரத்தில் இருந்து அஞ்சுகம் நகரில் உள்ள பாக்கியநாதன் என்பவரின் வீட்டின் மீது வேகமாக மோதியது.
பெரும் சத்தத்துடன் எந்திரம் மோதியதில் அந்த வீட்டின் மேல்தள சுவர் மற்றும் மேற்கூரை முற்றிலும் உடைந்து சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.
இந்த கோரவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போரூர் போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத துளையிடும் எந்திரத்தை செங்குத்தாக நிலைநிறுத்தும் போது ஆபரேட்டர் பின்னால் இருந்த வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதாக தெரிகிறது. ஆபரேட்டரின் கவனக்குறைவால்தான் இந்த கோரவிபத்து நடைபெற்றது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் கட்டுமானத்தின் முக்கியப் பணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மக்களின் நிலை என்னவாகும் என்றும், இந்த மெட்ரோ ரெயில் பணிகள் முடிவதற்குள் எத்தனை விபத்துகளை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.