Share via:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் இறந்த உடல் அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள், நேப்கின் உள்ளிட்ட 18 வகையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றை சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி, கழக மருத்துவர் அணி இணை செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘‘குழந்தையை காப்பாற்றி இருக்க வேண்டும், குழந்தை உயிரிழந்த நிலையில் அதற்கு உண்டான நெறிமுறைகளோடு உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும், சுகாதாரத் துறைக்கு உண்டான தர்மத்தை சுகாதாரத் துறையும் அரசும் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டி பேசினார்.
மேலும் கால்பந்தாட்ட வீராங்கணை பிரியா, கை அகற்றப்பட்டு உயிரிழந்த 18 மாத இஸ்லாமிய குழந்தை என சுகாதாரத் துறையின் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த அவர்,
துக்கத்தில் இருக்கும் குழந்தையின் பெற்றோர்கள் துணியை சுற்றி தாருங்கள் என்று கேட்க முடியுமா? அது அரசின் கடமை தானே? அதை செய்ய தவறிய இச்சம்பவத்தை வெளிகொண்டு வந்துள்ள ஊடகத்தினரை முடக்க நினைக்கும் செயலுக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தற்போதைய சுகாதாத் துறை ஐ.சி.யு.வில் இருப்பதாக தெரிவித்துக் கொண்டார்.