Share via:
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக மீட்டுள்ளனர்.
அதன்படி தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், சக்கரங்கள் பொருத்திய ‘ஸ்டிரெச்சர்கள்’ வாயிலாக தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டெடுத்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களையும் உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று நலம் விசாரித்தார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் தற்போது அடுத்தகட்டமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தார் மற்றும் ஊர் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.