Share via:
புதுவையில் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் 300 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் அட்சயபாத்திரம் என்ற நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் கொண்டது. அதன்படி 11 இடங்களில் அமைந்துள்ள நவீன சமையல் கூட்டங்களின் மூலம் மதிய உணவு தயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வர புதுவை அரசு முடிவு செய்தது. இது குறித்த ஒப்புதல் கோப்பை புதுவை அரசு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தது. இத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நமசிவாயம் கூறும்போது, துணை நிலை ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பணி முடிய 2 மாதங்களாகும் என்பதால் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசுத் தினத்தின் போது சிறுதானி பிஸ்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார். பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் போது நாள்தோறும் ஒரு சிறு தானிய பிஸ்கெட் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.