Share via:
கர்நாடக மாநிலத்தில் கந்துவட்டி கொடுமை தாங்காத தம்பதி தங்களது 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்த கரீப்த சாப், தனது மனைவி சுமையா மற்றும் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த கரீப் சாப் போதிய வருமானம் கிடைக்காததால் அக்கம்பக்கத்தினரிடம் 1 லட்சம் ரூபாய் அளவுக்கு மீட்டர் வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார்.
கடையில் விற்பனை சரியாக இல்லாததால், கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனது. மேலும் கடன் கொடுத்தவர்கள் கரீப்சாப்புக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், மனைவியிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாத கணவன் மனைவியும், விஷம் கலந்த உணவை 3 குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்ததை உறுதி செய்து கொண்ட கரீப்சாப் மற்றும் சுமையா இருவரும் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு வீட்டின் ஹாலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வீடியோவில் கந்துவட்டியால் பட்ட அவதியை கூறிய அவர்கள் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
திலக்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரின் உடல்களையும் பிரேதர பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரூ.1 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாத ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடனை திருப்பி தரச் சொல்லி கரீப்சாப்புக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.