Share via:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் அக்கார்டில் நேற்று (நவ.26) காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் முதலமைச்சர், அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்வதற்கான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போது அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி கூட்டம் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கியும் அவர்களிடம் இருந்து முக்கிய கருத்துகளையும் கேட்டறிந்தார்.
மேலும் வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.