Share via:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எப்படியும் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே, சதீஷ் பூனியா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கரண்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித்சிங் கூனார் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு இன்று (நவ.25) காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொது மக்கள் காலை முதலே வாக்குச்சாவடியில் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடித்திட உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு எண்ணிக்கை வருகிற டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுகின்ற நிலையில் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.