Share via:
மனைவி மற்றும் குழந்தை பெட்ரூமில் உறங்கிக் கொண்டிருந்த போது அங்கு விஷப்பாம்பை விட்டு அவர்களை கொலை செய்த கணவரை ஒரு மாதம் கழித்து ஒடிசா போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கபிசூர்யா என்ற பகுதியில் 25 வயதான கணேஷ் பத்ரா தனது மனைவி பசந்தி பத்ரா மற்றும் 2 வயது பெண் குழந்தையான டெபாஸ்மிதாவுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் பத்ரா மனைவியை எப்படியும் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு, ஒரு பாம்பாட்டியிடம் பூஜை நடத்த விஷப்பாம்பு ஒன்று வேண்டும் என கேட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிளாஸ்டிக் ஜாடியில் தான் கொண்டு வந்த நாகப்பாம்பை மனைவியும், மகளும் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் விட்டுவிட்டு மற்றொரு அறையில் அவர் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை மனைவி மற்றும் மகள் இருவரும் பாம்பு கடித்து இறந்து கிடந்தனர்.
இது குறித்து போலீசார் மர்மமான மரணம் என்று வழக்குப்பதிவு செய்த நிலையில் கணேஷ் பத்ராவின் மாமனார் தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக, காவல் கண்காணிப்பாளர் ஜக்மோகன் மீனாவிடம் புகார் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்த விசாரணையில், கணேஷ் பத்ரா பாம்பு தானாகவே அறைக்கு வந்திருக்கும் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டிருந்தார். பின்னர் போலீசின் கிடுக்குப்பிடியில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். குடும்பத் தகராறில் மனைவி மற்றும் குழந்தையை பாம்பை விட்டு கடிக்க செய்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.