Share via:
உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி நடைபெற்ற தொடர் முழக்க கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.ம.க.வினர் திரண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் திரளான வழக்கறிஞர் மற்றும் பா.ம.க.வினர் ஒன்றாக அமர்ந்து தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்திற்கு வழக்கறிஞர் பா.மு.திருமலை தமிழரசன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் எஸ்.செங்கொடி வரவேற்புரை நிகழ்த்திய பின்பு வழக்கறிஞர் தோ.ம.ஜான்சன் நோக்க உரை நிகழ்த்தினார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடக்க உரையும், இந்திய மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ராமகிருஷ்ணன் நிறைவு உரை நிகழ்த்த உள்ளார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய அரசே நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் தெளிவுப்படுத்தியபடி, உச்சநீதிமன்றத்தின் கருத்துக் கேட்பிற்கு அனுப்பாமல், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 348(2)இன் படி தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக ஆக்கிட தமிழ்நாடு அரசின் கோப்பினை, நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இசைவு பெற்றிடுக என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றிட சிறப்புச் சட்டத்தினை இயற்றிடுக! என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.